Tuesday 24 December 2013

பசுமையான பள்ளிக்கால நினைவுகள்...


தனிமை வாட்டிக்கொண்டிருந்த ஈரமான இரவுப்பொழுதில் பல நினைவுகளோடு மனக்கதவை தட்டி தூக்கத்தை மறக்கடிக்க செய்கிறது பள்ளிக்கால ஞாபகங்கள்
மனத்திரையில் சிறகடிக்கும் சில நினைவுகளோடு தூக்கம் விட்டு சில நிமிடங்கள்..

பள்ளி கால ஞாபகங்களை மீட்டிப்பார்க்கும் போது மனசுக்குள் ஒரு வித்தியாசமான இன்ப உணர்வு..
நாம எவ்ளோ தான் வாழ்க்கைல முன்னேறினாலும், நம்மளோட
ஆரம்பகாலத்தை நெனச்சுப் பார்க்கும்போது ஆச்சர்யமா இருக்கும்.

அது சில நேரம் சிரிப்பைத் தரும்.. சில சமயம் அழுகையை தரும்...
ஆனா அந்த நினைவுகள் என்னைக்கும் நம்ம மனச விட்டு நீங்குறதில்ல.

அதுபோலத்தான் எனக்கும் சில நினைவுகள் அப்பப்போ மனத்திரையில் சிறகடித்துக்கொண்டிருக்கும்...
அது சந்தோசமா அல்லது ஒரு வகை வலியா ஒன்னுமே புரியல்ல என்றாலும் அந்த உணர்வு மனசுக்கு சுகமா இருக்கு..

பாடசாலை வாசல் நோக்கி, ஆயிரம் கனவுகளோடு நுழைந்த,
எத்தனையோ மாணவர்களுக்குள் நானும் ஒருத்தன்..

ஸ்கூலுக்கு போறதுக்கு நேரமாச்சி எழும்புடா.. எழும்பு..
அம்மாட குரல் காலைல 6 மணிக்கே எழுப்பிடுவாங்க..
காலைல 6மணிக்கு எழும்புறதா?.. (எவ்வளவு கஷ்டம்னு இப்பதான் விளங்குது...)

ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னால அம்மாட கையால போட்டுத்தந்த கோப்பி..
அது வெறும் கோப்பியல்ல அன்பு பாசம் எல்லாம் கலந்தது..
வீட்ல இருந்து கொஞ்ச தூரம் நடந்துதான் போகனும்

வெள்ளை சேட் வெள்ளை காற்சட்டை
கழுத்தில் ஒரு பேக்..
ஏகப்பட்ட நண்பர்கள்..
நிறைய கற்பணைகள், கனவுகள்
கவலை மறந்து எப்போதும் சந்தோஷம்...
மீண்டும் கிடைக்காத அந்த நிமிடங்கள்
இன்னும் வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன மனத்திரையில்..

பாட வேளைகளை கட் அடிச்சி புளியம்மரத்தடியில் அரட்டை அடித்த நாட்கள்
ஸ்கூலுக்கு கட் அடிச்சி நண்பர்களோடு சேர்ந்து பார்த்த படங்கள் ..
ஆசிரியர் இல்லாத நேரத்தில் வகுப்பறையில் போட்ட கும்மாளம்..
சின்ன சின்ன சண்டைகள் வித வித குதூகலங்கள் நிறைந்த அற்புத நாட்கள் அவை..

பள்ளி வாழ்க்கையைப் போலவே எப்பவுமே மறக்க முடியாத பாடசாலை தான் அறபா..
ஆரம்பம் முதல் உயர்தரம்வரை அறபா தான்..
இப்போ நூற்றிருபத்தைந்தாண்டு தாண்டி தலைவர்கள் பலரை உருவாக்கி சாதனைகள் பல புரிந்து கொண்டிருக்கின்றது நான் கற்ற அந்த பாடசாலை.

இலங்கை தீவெங்கும் அறிவொளி ஏற்றிடும் கலையகம் வெலிகம அறபா”..
பாடசாலைக் கீதத்தின் ஒரு வரி தான் இது..
காலைக் கூட்டத்தின் போது ஒவ்வொரு நாளும் கேட்கக்கூடியது..

சிறியவனாய் சென்ற எனக்கு சிந்திக்க கற்று கொடுத்ததும் அந்த அறபா..,
எனக்கு இப்போ ஒரு முகவரி கொடுத்திருப்பதும் அந்த அறபா தான்..,

முகவரி தந்த பாடசாலை
கூட இருந்த சொந்தங்களையும் நண்பர்களையும் பிரித்து விட்டது..

காலத்தின் தேவை ஊரையும் பிரிந்து உறவையும் பிரிந்து
நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு ஒரு வாழ்க்கை..

புதுப்புது நட்புகள் கிடைச்சாலும் ஆரம்பகால நட்புக்களை மறக்கவே முடியல

நான் இழந்த அந்த இதமான நாட்களை
மறுபடியும் மீட்டுக் கொள்கின்றேன்..
பள்ளிப் பருவமதை பசுமையுடன்
திரும்பிப் பார்க்கிறேன் இந்த இதமான இராப்பொழுதில்
இரண்டு விழிகள் மட்டுமே துணையாய்…

No comments:

Post a Comment

Thanks.. ur welcome